நீங்கள் எடுத்த முடிவு சரியானதா ? தவறானதா ? | Motivational Story

மிகவும் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த கதை உங்களுக்கானது தான்.

அது ஒரு காட்டில் இயங்கி வந்த குருகுலம். அந்த குருகுலத்தின் ஆசிரியர், வழக்கம்போல ஒரு நாள் மாணவர்கள் அனைவரையும் உட்கார வைத்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், திடீரென்று தடதடவென்று ஒரு சத்தம். அதாவது அந்நாட்டின் அரசர் அத குருகுலத்திற்கு வருகை புரிந்திருந்தார்.

அரசர் தனது குதிரைச் சாரத்திலிருந்து இறங்கி, நேராக அந்த குருவிடம் வந்து, "குருவே! குருவே! நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். அந்த முடிவு சரியானதா ? இல்லை தவறானதா ? என்று நீண்ட நாட்களாகவே குழப்பத்தில் இருக்கிறேன். நீங்கள்தான் அந்தக் குழப்பத்தைத் தீர்த்து வைக்க வேண்டும்" என்று கூறினார்.

"என்னடா இது !! ஒரு நாட்டின் அரசர், இதை தந்து அமைச்சரிடம் கேட்காமல், ஒரு குருவிடம் வந்து கேட்கிறாரே !!", என்று நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம்.

அரசர், ஒரு காலத்தில் அந்த குருவிடம் பாடம் பயின்றவரே !! 'தனது குரு சொல்லும் எதுவாயினும் சரியாகத்தான் இருக்கும்' என்னும் நம்பிக்கையும் அபாரம் உண்டு.

ஆனால் குருவோ, அரசர் எடுத்த முடிவு என்ன என்பதைப் பற்றிக் கேட்டுக் கொள்ளவேயில்லை. எதைப் பற்றிய முடிவு அதுவென்றும் அறிந்து கொள்ளவில்லை. அரசரிடம், வெறுமனே மூன்று கேள்விகளை மட்டும் கேட்டார்.

முதல் கேள்வி, "அரசரே !! நீங்கள் இந்த முடிவை அதிகப்படியான கோபத்திலோ, அதிகப்படியான சந்தோஷத்திலோ, இல்லை அதிகப்படியான வருத்தத்திலோ எடுத்தீர்களா?" என்பது.

அரசர் அதற்கு இல்லையென்று பதிலளிக்க இப்போது இரண்டாவது கேள்வி.

"அரசரே நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை, யாரோ ஒருவருக்கு பயந்தோ, யாரோ ஒருவரைத் திருப்திப் படுத்துவதற்காகவோ, அல்லது யாரோ ஒருவரைப் பழிவாங்குவதற்காகவோ எடுத்தீர்களா ?"

அந்தக் கேள்விக்கும், அரசர் இல்லையென்றே பதிலளிக்க, இப்போது மூன்றாவது கேள்வி.

"அரசரே !! இந்த முடிவு எடுக்கப்பட்டால், அதில் வரும் இலாபம், நஷ்டம் இரண்டையுமே யோசித்துப் பார்த்தீர்களா?"

இந்த கேள்விக்கு மட்டும், அரசர் "ஆமாம்" என்று பதில் கூறினார்.

குரு, அடுத்ததாக எந்தவொரு கேள்வியையும் கேட்கவில்லை. முகமலர்வோடு அரசரிடம், "நீங்கள் எடுத்த இந்த முடிவு, சரியானதாகவே இருக்கும். தைரியமாக, அதை செயல்படுத்தத் தொடங்குங்கள்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்.

இப்போது, அவரிடம் பாடம் படித்துக் கொண்டிருந்த அந்த மாணவர்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம்.

"குருவே !! நீங்கள் எதை அடிப்படையாக வைத்து, அரசர் எடுத்த முடிவு சரியானது தான் என்று சொன்னீர்கள் ? அரசருக்கு என்ன பிரச்சனை ? அவர் என்ன முடிவு எடுத்திருக்கிறார் ? எதைப்பற்றிய முடிவு அது ? என்று எதையுமே கேட்டு அறிந்து கொள்ளவில்லையே !!", என்று குருவிடம் தங்கள் சந்தேகத்தைக் கேட்டனர்.

அதற்கு குரு சொன்னார்; " மாணவர்களே !! இந்த ரகசியத்தை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள். ஒரு முடிவு எதைப்பற்றி வேண்டுமானாலும், இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், அந்த முடிவை எடுக்கும்போது ஒரு மனிதனுடைய மனமாகட்டும் அறிவாகட்டும் தெளிவாக இருக்க வேண்டும்.

ஆனால், ஒருவன் உணர்ச்சிவசப்படும் போது - அதாவது அதிகமாக கோபப்படும்போது, அதிகமாக சந்தோஷப்படும்போது, இல்லை அதிகமாக வருத்தப்படும்போது, அவனுடைய மனம் தெளிவாக இருப்பதில்லை.

அதே போல, அவன் யாரையாவது பழிவாங்க வேண்டுமென்று நினைக்கும்போதும், யாரையாவது திருப்திப்படுத்த வேண்டுமென்று நினைக்கும்போதும் அவனுடைய அறிவு தெளிவாக இருப்பதில்லை.

மனமும் அறிவும் தெளிவாக இல்லாத ஒருவன், இலாப நஷ்டத்தைப் பற்றியும் யோசிக்கமாட்டான். அவன் எடுக்கும் முடிவும் சரியானதாக இருக்காது. அதனால்தான், அரசரிடம் இது சம்பந்தமாக மூன்று கேள்விகளைக் கேட்டேன். அரசர் மிகவும் தெளிவான மனநிலையில் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பதை உறுதி செய்து கொண்டேன். பின்னர், அது என்ன முடிவு என்பதைக் கூடக் கேட்காமல், அவர் எடுத்த முடிவு சரியானது தான் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்" , என்று.

ஆம், நண்பர்களே !! இன்னொருமுறை உணர்ச்சி வசப்படும்போதாகட்டும், முடிவுகள் எடுக்கும்போதாகட்டும் இந்த கதையை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கப் போகும் முடிவினால் வரும் இலாபம் நஷ்டம் இரண்டையும் யோசித்து மட்டுமே முடிவெடுங்கள்.அந்த முடிவு நல்லதாகத்தான் அமையும்; அந்த முடிவினால் உங்களுக்கு நல்லதே நடக்கட்டும் என்று கூறி இந்த கதையை முடித்துக் கொள்கிறேன். 


Check these stories also from APPLEBOX
உங்களது கவனச்சிதறலுக்கு முடிவுகட்ட, இந்தக் கதையைக் கேளுங்கள் 
தங்க மலர் - Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil

தேவையில்லாத சாபத்தைப் பற்றி நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள் 
பயந்த செம்மறி ஆடுகள் - Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
மந்திர கடிகாரம் - Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் நேரத்தின் முக்கியத்தை உணராதவாராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
நான்கு ரகசியங்கள் - Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil

To watch this as a video, please click the PLAY BUTTON below



This section in APPLEBOX is exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.

In YOUTUBE, you can search for Applebox Motivational Stories, Kutty Stories Applebox and Kutty Kadhai Applebox. Both my channel and website has a good collection of motivational stories in Tamil. Those Stories include Stories of
Successful People in Tamil
Motivational Video in Tamil for Students
Motivational Video in Tamil for College Student
Moral Stories in Tamil and Kutty Stories.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post