Motivational Story in Tamil - 'பணம்' பற்றிய இரகசியம்

பணம்...

சிலருக்கு தேவைக்கு; சிலருக்கு ஆசைக்கு; இன்னும் ஒரு சிலருக்கு அதிக ஆசைக்கு...
 
இப்படி அனைவருக்குமே, ஏதாவது ஒரு வகையில் இந்தப் பணம் என்பது தேவைப்படத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட பணத்தை நல்ல வழியில் சம்பாதிப்பதற்கும், நாம் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை வைத்து  நல்ல வழியில் வாழ்வதற்கும், யாராவது ஒருவர் ஏதாவது ஒரு ரகசியத்தைக் கற்றுக்கொடுத்தால், எப்படி இருக்கும்? 

அதைத்தான், நாம் இந்தக் கதையில் பார்க்கப் போகிறோம். 

இதைப் படித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலானோருக்கு 'The Secret' என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்திருக்கும். அந்தப் புத்தகத்திலுள்ள நிறைய கருத்துக்களை கற்பனைக் கதைகளாக நான் எழுதியிருக்கிறேன். அதில், ஒரு கதையைத் தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

மலைக்கிராமம் ஒன்றில், வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நீண்ட நாட்களாகவே, ஒரு வருத்தம். என்னவெனில், அவர் என்னதான் கடுமையாக உழைத்து பணம் சம்பாதித்தாலும், அந்தப் பணத்தை வைத்து அவரால் எந்தவொரு உருப்படியான செயலையும் செய்ய முடியவில்லை. ஏதாவது ஒரு வழியில் செலவுகள் அவரை விட்டுச் செல்வதாக இல்லை. 

நாளடைவில், இதனால் விரக்தியடைந்தார் அந்த வியாபாரி. இப்படியிருக்கையில் ஒருநாள் அவர் ஒரு மலைக்கோவிலுக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு ஒரு சித்தரை சந்திக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

சித்தர் என்பவர் அனைத்தையும் துறந்தவர். இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்கள் துன்பங்கள் - 'எதுவுமே வேண்டாம்' , என்று சமநிலையில் வாழ்பவர். ஆயினும், அவரை சந்தித்த வியாபாரிக்கு ஏன் தான் அப்படியொரு கேள்வி தோன்றியதோ தெரியவில்லை.

பின்னே !! மனிதர் சித்தரிடம் கேட்டது, பணம் பற்றிய கேள்வியல்லவா !!

ஆம், " ஐயா, நான் அரும்பாடுபட்டு பொருளை ஈட்டுகிறேன். ஆயினும், நான் ஈட்டிய பொருளனைத்தும் வரவில் நின்ற மறுகணம் செலவிலும் சென்று விடுகிறதே !! இதன் காரணம் தான் என்னவோ ??" என்றல்லவா வினவினார் அந்த வியாபாரி !!

ஆயினும், சித்தர் அந்தக் கேள்வியை உதாசீனப்படுத்தவில்லை. 'உனக்கு கேட்பதற்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா ?' என்பது போல அவரைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தாலும், கேள்வியோடு நின்ற அந்த பாவப்பட்ட வியாபாரிக்கு, பதில் கூறுவதும் தன்னுடைய கடமை தான் என்றே அவர் நினைத்தார்.

அதனால், அந்த வியாபாரியை அருகில் கூப்பிட்டு, 'மகனே !! நீ கேட்ட கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை; ஆனால், எனக்குத் தெரிந்த வேறு மூன்று நபர்களிடம் நிச்சயம் உனக்கான பதில் கிடைக்கும். இதோ, இது அவர்கள் என்னை சந்திக்க வரும் நேரம் தான். சற்று காத்திரு" என்றார்.
 
அதே சமயத்தில், அந்த மலைக்கோவில் சித்தரைக் காண்பதற்காக கடினப்பட்டு மலையேறி வந்தார்கள் மூவர். அதில் முதல் நபர் - ஒரு வியாதியஸ்தர் போலத் தோற்றமளித்தார். இரண்டாவது நபர் - அதிக தாடியுடன், கவலை மிகுந்த ஒரு நபர் போலத் தோற்றமளித்தார். மூன்றாவது நபர் - நல்ல ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் காணப்பட்டார்.

இப்படிப்பட்ட இந்த மூவரும் சித்தரைப் பார்த்து வணக்கம் செலுத்தினார்கள். அவர்களை ஆசீர்வதித்து அம்மூவரிடமும், "பிள்ளைகளே !! நாமெல்லாம் எதற்காக சம்பாதிக்கிறோம் ?", என்று கேட்டார். 

மூவருமே, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, ஒன்றுசேர ஒரே மாதிரியான பதிலைக் கூறினார்கள்.

"எல்லாம். இந்த ஒரு சாண் வயிற்றுக்காகத்தான் சாமி"

"ஹா, ஹா, ஹா. அப்படியெனில், இந்த ஒரு சாண் வயிற்றை மீறியும், நாம் பணத்தை சேர்த்து வைத்துக்கொள்கிறோமே !! அது எதற்காக ?" 

கேட்டுவிட்டு, வினோதமாக சிரித்தார் அந்த சித்தர்.

மூவரும், மறுபடியும் ஒருமுறை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். பின்னர், ஒவ்வொருவராக தமது பதிலைச் சொன்னார்கள்.

முதல் நபர் - அந்த வியாதியஸ்தர் சொன்னார்; "நாம் நலமாக இருக்கும் போது பிரச்சினையில்லை சாமி. ஆனால், வயதாகும் போது நமக்கு பலவிதமான வியாதிகள் வருகின்றனவே !! அப்போது நம்மைப் பராமரித்துக்கொள்ள நமக்கு காசு பணம் வேண்டாமா ? அதற்காகத்தான் காசு பணத்தைச் சேர்க்கிறோம்", என்று.

இரண்டாவது நபர் - அந்த தாடிக்காரர் சொன்னார்; "நம் வாழ்க்கை என்பதே நிலையில்லாதது தானே, சாமி. எப்போது எந்தப் பிரச்சினை வருகிறது என்று யார்க்குத் தெரிகிறது ? ஒருவேளை, திடீரென்று கடனோ, கஷ்டமோ வந்தால், சமாளிப்பதற்கு காசு வேண்டாமா ? அதற்காகத்தான் எல்லாரும் காசு பணத்தைச் சேர்க்கிறோம்", என்று.

மூன்றாவது நபர் - அந்த ஆரோக்கியமான மனிதர் சொன்னார்; "சாமி, என்ன தான் இந்த மனுஷ ஜென்மம் இந்த ஒரு சாண் வயிற்றுக்காக சம்பாதித்தாலும், அந்த வயிற்றை ரொப்பிக்கொள்ள பாடுபட்டாலும், இதையும் மீறி இந்த உலக வாழ்க்கைக்கென்று சிறு சிறு விஷயங்கள் நமக்குத் தேவைப்படுகிறனவே !! நாம் வாழ்வதற்கென்று ஒரு வீடு; போட்டுக் கொள்ள துணிமணிகள்; நம் குழந்தைகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள்; அவர்களோடு சேர்ந்து நாம் கொண்டாட வேண்டிய தருணங்கள்; ஏழைகளுக்கான தான தர்மங்கள் - இப்படி பலவும் சேர்ந்தது தானே இந்த வாழ்க்கை. 

இப்படி எல்லாவற்றையும் சேர்ந்து அனுபவிக்க, நமக்கு செல்வம் தேவைப்படுகிறது அல்லவா? அதனால் தான் நாம் கடினமாக உழைக்கிறோம். உழைத்த செல்வதை சேர்க்கவும் செய்கிறோம்", என்று.

இப்போது இந்த சித்தர் மறுபடியும் சிரித்தார். அந்த வினோத சிரிப்போடேயே, முதலில் தன்னிடம் விரக்தியோடு ஒரு வியாபாரி வந்தாரே, அவரைப் பார்த்தார்.
பின்னர், வானத்தைப் பார்த்தபடி சொன்னார்.

"இந்த செல்வம் இருக்கிறதே செல்வம். அதை பாடுபட்டு சேர்ப்பது வேண்டுமானால் இந்த உடலும் அறிவுமாக இருக்கலாம் . ஆனால், அந்த செல்வம் சேர்த்தவனிடத்திலேயே தங்கி அவனுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால், அது அவனது எண்ணத்தின் கையில் தான் இருக்கிறது. 

பாரேன்....

அந்த முதலாவது  நபர் - செல்வத்தை சேர்க்கும்போதே, வருங்காலத்தில் தனக்கு வியாதி வந்துவிட்டால் அந்த செல்வம் உதவட்டும் என்று எண்ணிக்கொண்டே இருந்திருக்கிறார். அவரது செல்வம் - இப்போது அவருக்கு  அதற்கே உதவிக்கொண்டிருக்கிறது. 

இரண்டாவது நபர் - செல்வத்தை சேர்க்கும்போதே, வருங்காலத்தில் தனக்கு ஏதாவது பிரச்சனை வந்தால், அதற்கு அந்த செல்வம் உதவட்டும் என்நினைத்திருக்கிறார். அவரது செல்வம் - இப்போது அவருக்கு  அதற்கே உதவிக்கொண்டிருக்கிறது. 

மூன்றாவது நபர் மட்டும் தான் - அந்த செல்வத்தைச் சேர்க்கும் போது, அதைத் தானும் அனுபவித்து தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களும்  நல்ல விஷயங்களுக்காக அனுபவித்து, பல்வேறு தான-தர்மங்களும் கூட செய்ய வேண்டுமென்று எண்ணியிருக்கிறார். அவரது செல்வம் - இப்போது அவருக்கு  அதற்கே உதவிக்கொண்டிருக்கிறது. 

ஆக, யாருக்கேனும் நன்கு உழைத்த பிறகும்கூட, புத்தியை நன்கு பயன்படுத்திய பிறகும் கூட, செல்வம் விரையமாகிக் கொண்டேயிருக்கிறது என்றால், அவர் - தான் உழைக்கும் போதும், பொருளீட்டும் போதும், தனது எண்ணத்தில் கவனம் வைக்கவில்லையென்று அர்த்தம். 

எண்ணத்தில் கவனம் வை மனமே ! நல்லெண்ணத்தில் கவனம் வை மனமே !" , என்று.

ஆம், நண்பர்களே !! 

நம்மில் பெரும்பாலானோர், எதற்காக காசு சேர்க்கிறோம் என்றால், 'இன்றைக்கு நாம் சிக்கனமாக இல்லையென்றால், வருங்காலத்தில் நாம் கஷ்டப்படுவோம்' என்ற பதற்றத்தில், பயத்தில். நம்மில் வெகு சில பேர் மட்டும்தான், 'இன்றைக்கு நாம் சிக்கனமாக இருந்தால் மட்டுமே, வருங்காலத்தில் நன்றாக, செழிப்பாக  இருக்க முடியும்' என்ற எண்ணத்தையே நம்மில் விதைத்திருக்கிறோம். 

'எண்ணம் போல் வாழ்வு' என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள் ? அப்படிப்பட்ட எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் எதற்காக இந்த எதிர்மறை போக்கு ?

தயவுசெய்து, இனிமேல் அந்த எண்ணத்தை நேர்மறையாக்குங்கள். கஷ்டப்பட்டு உழைக்கும் போதும், சம்பாதிக்கும் போதும், அதனை சேர்த்து வைக்கும் போதும் - 'இது என்னுடைய வருங்காலம் நன்றாக இருப்பதற்காக, நான் முன்னேறி மேலே செல்வதற்காக' என்பதை சிந்தனையில் நிறுத்துங்கள். 

அப்படி நீங்கள் உழைத்து முன்னேற இந்த இயற்கையும் இறைவனும் உங்களுக்கு அருள்புரிவார்கள்.

Check these stories also from APPLEBOX
உங்களது கவனச்சிதறலுக்கு முடிவுகட்ட, இந்தக் கதையைக் கேளுங்கள் 
தங்க மலர் - Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil

தேவையில்லாத சாபத்தைப் பற்றி நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள் 
பயந்த செம்மறி ஆடுகள் - Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
மந்திர கடிகாரம் - Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் நேரத்தின் முக்கியத்தை உணராதவாராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
நான்கு ரகசியங்கள் - Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil

To watch this as a video, please click the PLAY BUTTON below


This section in APPLEBOX is exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.

In YOUTUBE, you can search for Applebox Motivational Stories, Kutty Stories Applebox and Kutty Kadhai Applebox. Both my channel and website has a good collection of motivational stories in Tamil. Those Stories include Stories of
Successful People in Tamil
Motivational Video in Tamil for Students
Motivational Video in Tamil for College Student
Moral Stories in Tamil and Kutty Stories.

1 Comments

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post