யாழினி | A Tamil Romantic Novel by Sabari Paramasivan | PART 11

மணாளன், அன்று அவளது அலைபேசி எண்ணை வாங்கினானே ஒழிய, மறுபடி அவளைத் தொடர்பு கொள்ளவேயில்லை. 

'ஏன் இப்படியிருக்கிறான் ? பெயருக்காவது ஒரு கால் செய்யக்கூடாதா !! ' , என்று கோபமாக வந்தது யாழினிக்கு. தானாக அவனைத் தொடர்புகொள்ளலாம் என்று தோன்றினாலும், அவளுக்குள் இருந்த அந்த சின்ன 'ஈகோ', அவளைத் தடுத்தது.

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு, அவனே ஒரு நாள் அழைத்து, "வர்ற ஞாயிற்றுக்கிழமை, எங்க வீட்டுல ஒரு விசேஷம். அதுக்கு நீ நிச்சயம் வரணும்" , என்றான்.

யாழினி எவ்வளவோ மறுத்தும், அவன் விடுவதாகத் தெரியவில்லை. 

"பயப்படெல்லாம் வேண்டாம் யாழினி. அது ஒரு அறுபதாம் கல்யாணம். அதனால, நெருங்கிய உறவினர்கள் மட்டும்தான் இருப்பாங்க. உன்னை எங்க குடும்பத்துக்கு அறிமுகம் செய்து வைக்க, இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. இதை மிஸ் பண்ண  வேண்டாம். நிச்சயமா வந்துடு" , என்று அவன் கட்டாயப்படுத்திச் சொல்லியதால், யாழினியும் அரை மனதுடன் சம்மதித்தாள்.

துணைக்கு சுஜியையும் கூட்டிக்கொண்டு போகலாமென்றால், அவளோ, மதுரையிலுள்ள தனது குலதெய்வக்  கோவிலுக்குச் சென்றுவிட்டாள். ஆகையால், தற்போது தனியாகச் செல்வதைத்தவிர, வேறு எந்த வழியுமில்லை.

குழப்பத்தின் மத்தியிலும், அந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் துரிதமாகக் கிளம்பிக்கொண்டிருந்தாள், யாழினி.

'பர்ஸ்ட் இம்ப்ரெஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரெஷன்' , என்பார்களே. அதனால், முதல்முறையாக அவனது குடும்பத்து நபர்களை சந்திக்கும்போது, தன்னால் முடிந்தவரையிலும் அவர்களிடம் ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், என்பதில் மிகக் கவனமாக இருந்தாள்.

கரும்பச்சை நிறத்தில், ஒரு இன்ச் அகலத்துக்கு மட்டும்,  தளிர்ப்பச்சையில் பார்டர் வைக்கப்பட்டிருந்தது, அந்த 'சில்க் காட்டன்' புடவை. போன பிறந்தநாளுக்கென்று அவள் அம்மா பரிசளித்தது. அம்மாவின் தேர்வு, எப்பொழுதுமே மிக நன்றாக இருக்கும். அதுவும் யாழினிக்கென்றால், வானதி சற்று அதிக கவனமெடுத்து, ஒவ்வொரு உடையையும் தேர்வு செய்வாள். 

ஒன்றிரண்டு மெலிதான வளையல்களை வலக்கையில் அணிந்துகொண்டு, இடக்கையில் எப்பொழுதும்போல, டைட்டன் வாட்சைக் கட்டிக்கொண்டாள். அவள் அழகு மெருகேறி, முகம் பிரகாசித்தது.

கிளம்பி முடித்தபிறகு, அவளை ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டே இருந்தது.

'அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்வார்களோ !! அவன் அறிமுகம் செய்து வைக்கும்போது, அவர்கள்  அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ !! ' , என்றெல்லாம் யோசித்துக்கொண்டே இருந்தாள்.

.....

அவன் வீட்டு வாசலில் சென்றிறங்கிய பின்னரும்கூட, யாழினிக்கு அந்த படபடப்பு விட்டபாடில்லை.

அம்பத்தூருக்கு அருகிலுள்ள திருமுல்லைவாயிலில் அமைந்திருந்தது, அவர்கள் வீடு. அன்று அந்த ஹோட்டலில் அவர்கள் குடும்பத்தைப் பார்த்திருந்தால், 'இப்படித்தான் அவர்கள் வீடு இருக்கும்' என்று கற்பனை செய்துவைத்திருந்தாள், யாழினி. அதைவிடவும் சற்று பெரிய வீடாகத்தான் இருந்தது.

விடுதியிலிருந்து கிளம்பும்போதே மணாளனுக்கு அறிவித்திருந்தபடியால், அந்த பெரிய காம்பௌண்ட் கேட்டின் அருகில் நின்றுகொண்டிருந்தான், அவன். 

அன்று வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தான். அவனது உயரத்துக்கு அது இன்னும் கம்பீரத்தைக் கொடுத்தது. 

அவளைப்பார்த்ததும், புன்முறுவலோடு வரவேற்று, உள்ளே அழைத்துபோனான். அந்த கேட்டிலிருந்து சென்ற நடைபாதை போன்ற அமைப்பு, கார் நிறுத்துவதற்காக போடப்பட்டிருந்த போர்டிகோவில் சென்று நின்றது.

பாதையின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த சிறிய தோட்டம், மிகவும் நேர்த்தியாக இருந்தது. கோவில் நந்தவனங்களில் அமைக்கப்பட்டிருக்கும், ஆர்ப்பாட்டமில்லாத தோட்டம்போல இருந்தது. அதிலிருந்த செவ்வரளிப் பூக்களின் வாசம், மிகவும் ரம்மியமாக இருந்தது.

அதையே கவனித்திருந்தபடியால், எதுவும் பேசாமல், மணாளனின் பின்னாலேயே நடந்துகொண்டிருந்தாள், யாழினி.

போர்டிகோவை அடைந்ததும், திடீரென்று நின்று அவளைத் திரும்பிப்பார்த்த அவன், "இன்னைக்குத்தான், முதல் தடவையா உன்ன புடவைல பாக்குறேன்ல" , என்று சொல்லிவிட்டு அவளுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்து, "யூ லுக் கார்ஜியஸ் இன் திஸ் சாரீ" என்றான்.

அவளுக்கு, என்னவோ போலிருந்தது. மௌனமாக நின்றாள்.

"யாராவது பாராட்டினால், தேங்க்யூ சொல்லணும்" , அவன் சொல்லவும்தான், 'எதுவுமே சொல்லாமல், மெய்மறந்து நிற்கிறோம்', என்பது அவளுக்கு உரைத்தது.

"சாரி... மறந்துட்டேன். தேங்க்யூ" , என்கிறான்.

"வெல்கம்.. அதாவது, எங்கள் வீட்டுக்கு உன்னை வரவேற்கிறேன்", என்று சொல்லிவிட்டு, வரவேற்பதுபோன்று பாவனை செய்தான்.

அவள் புன்னகைத்தாள்.

வீட்டின் வாசலில், மாவிலை கட்டப்பட்டு, நிலைமாலையும் தொங்கவிடப்பட்டிருந்தது. ஹோமப்புகையின் வாசனையோடு, சாம்பிராணியின் வாசமும் கலந்து, கோவிலுக்குள் இருப்பதுபோன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. 

தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்வதற்காக, மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள்.

வராந்தாவிலிருந்த சோபாவில் உட்கார்ந்தபடி, ஐம்பது அறுபது வயது மதிக்கத்தக்க ஆண்கள் சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள். மணாளனுடன் யாழினியைக் கண்டதும், சற்று குழப்பத்துடன் பார்த்துவிட்டு, பின்னர் தங்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள்.

அடுத்திருந்த பெரிய ஹாலில், சிறிய மேடையொன்று அமைக்கப்பட்டு, அதில் அந்த தம்பதிகள், மாலையும் கழுத்துமாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை பார்ப்பதற்கு கண்ணுக்கு நிறைவாக இருந்தது. அவர்களருகே, ஒரு மரநாற்காலி போடப்பட்டு, அதில் எழுபது வயதுக்கு மேற்பட்ட ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். 

அவரருகே, அன்று அந்த ஹோட்டலில் பார்த்த, காட்டன் புடவையணிந்த பெண்மணி நின்றுகொண்டிருந்தார். அவர் இன்றும்கூட, அதே மாதிரியான ஒரு காட்டன் புடவைதான், அணிந்திருந்தார். அவ்வப்போது அவர், அந்த பெரியவரின் காதருகே சென்று எதாவது பேசிக்கொள்வது தெரிந்தது.

அந்த மேடையின்  எதிரில் போடப்பட்டிருந்த சோபாக்களிலும் சேர்களிலும், விதவிதமான நிறங்களில் பட்டுப்புடவை உடுத்திய பெண்கள் உட்கார்ந்து, பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களில் சிலரை, ஏற்கனவே, அந்த ஹோட்டலில் பார்த்ததாக ஞாபகம் யாழினிக்கு.

இவள் மணாளனுடன் உள்ளே நுழைந்ததும், அவர்கள் ஒருசேர யாழினியைப் பார்த்தது, அவளது படபடப்பை இன்னும் அதிகமாக்கியது. கைகள் நடுங்க ஆரம்பித்தன.

அதை உணர்ந்தவனாய், "பயப்படாதே யாழினி. மற்ற யாரையும் தெரியலேன்னு யோசிக்கிறியா ? அவங்கள தெரியலேன்னா என்ன ? நான் இருக்கேன்ல ", என்றான்.

அது அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனாலும், அந்த நடுக்கம் குறையவில்லை. 

அவ்வப்போது, 'மாணாளனின் பெற்றோர் யாராக இருக்கும் ?' என்ற யோசனை, வந்து வந்து போனது.

திடீரென கெட்டிமேளம் சத்தம் கேட்டது. அந்த மேடையில், மாங்கல்ய தாரணம் ஆரம்பித்தது. எல்லோரும் மகிழ்ச்சியோடு பூக்களைத் தூவி, அவர்களை வாழ்த்தினார்கள்.

அதைப்பார்க்கும்போது, யாழினிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி, அவளைத் தொற்றிக்கொண்டது.

இப்போது தம்பதியினர், அந்த வயதானவரின் காலில் விழுந்து ஆசிகள் பெற்றார்கள். அவர் மகிழ்ச்சியோடு அவர்களை வாழ்த்தி, கண்களில் பொங்கிய ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொள்வது தெரிந்தது. அவரின் பின்னால் நின்ற அந்த காட்டன் சேலைப் பெண்மணி, அவர் கண்களைத் துடைத்துவிட்டு "அழாதீர்கள்",  என்று சொல்லிக்கொண்டிருந்தார். 

அதையும் மீறி, அவர் அந்த பெண்மணியின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, குலுங்கியபடி அழுததைக் காண முடிந்தது.

அடுத்தடுத்து பலர், மேடைப்பக்கம் சென்று அவர்களுக்கு 'கை' கொடுத்து, வாழ்த்திக் கொண்டிருந்தனர். 

சில நிமிடங்களில், ஹாலில் நின்ற அந்தக் கூட்டம், கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து, ஆளாளுக்கு மாடிக்கும், வராந்தாவுக்கும், பின்னாலிருந்த தோட்டத்துக்குமாகச் சென்றார்கள்.

போகிறவர்கள் சும்மா போகாமல், யாழினியையும் மணாளனையும், ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். யாழினிக்கு குறுகுறுப்பாக இருந்தது. மணாளன், இவற்றையெல்லாம் சட்டை செய்வதாகத் தெரியவில்லை.

"யாழினி.. வா.. நம்மளும் போய் அவங்கள விஷ் பண்ணலாம்" , என்று தன் கரங்களை நீட்டினான்.

'என் கையைப் பிடித்துக்கொள்' என்பதுபோல இருந்தது அந்த பாவனை. "உண்மையிலேயே கேட்கிறானா ? இவனுக்கு கைகொடுப்பதா ? அப்படி கொடுத்தால், சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ?" , என்று தனக்குள் நினைத்துக்கொண்டு குழம்பியபடி நின்றாள், யாழினி.

அதே நேரத்தில், யாரோ.. "வா அத்தான். நம்மளும் போகலாம்" , என்று சொல்லியபடி அவனது கரங்களைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார்கள்.

திகைத்தபடி நின்றாள், யாழினி.

யாழினி வருவாள்...........


This is my first Romantic Novel in Tamil

If you are a fan of  Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi. 

You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post