யாழினி | A Tamil Romantic Novel by Sabari Paramasivan | PART 10


 "ஏய், லூசு.. இதுக்கெல்லாம் யாரவது அழுவாங்களா ?? ப்ச்ச்.. முதல்ல கண்ணத் தொட.. " 

அலுவலக ரெஸ்ட்ரூமுக்குள் நின்றுகொண்டு, தேம்பித்தேம்பி அழுத யாழினியை, சமாதானம் செய்தாள், சுஜி. தலையணைகளுக்கு மட்டுமல்ல, ரெஸ்ட்ரூம் டிஷ்யூ பேப்பர்களுக்கும், கண்ணீரின் ஈரம் தெரியும்.

'யாராவது வருகிறார்களா' என்று நோட்டம்விட்டபடியே, அழுதுகொண்டிருந்த தன் தோழியைத் தேற்றிக்கொண்டிருந்தாள், அவள்.

"இல்ல சுஜி. என்னால முடியல. எனக்கு, என்னையும் மீறி, அழுகையா வருது. கண்ட்ரோல் பண்ண முடியல" , என்று மறுபடியும், யாழினி அழ,

"நீ எவ்ளோ தைரியமான பொண்ணு. எத்தனை பிரச்சனைகளைப் பார்த்து வளர்ந்துருக்குற. எல்லாத்தையும் மீறித்தானே, இப்படி முன்னேறி வந்துருக்க.  இப்போ, இந்த சின்ன விஷயத்துக்கு அழுதா எப்படி ?" , என்று அவளுக்கு தைரியம் சொன்னாள்.

"அப்போல்லாம், ரொம்பவே நம்பிக்கை இருந்துது, சுஜி. படிச்சி ஒரு வேலைக்குப் போயிட்டா, சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா, 'எல்லாம் சரியாகிடும்னு' நம்பிக்கை இருந்துது. 

ஆனா, இப்போ.. கொஞ்சம். கொஞ்சமா சந்தேகம் வருது. இந்த காதல், கல்யாணம்னு வரும்போது, படிப்பும் வேலையும் மட்டும், போதாது. பணம். குடும்பம். அந்தஸ்து. நமக்குன்னு நாலுபேர்..."

மூக்கை உரிந்துகொண்டு, மறுபடியும் அழுதாள்.

"இப்போ, யார் என்ன சொன்னாங்க உன்ன ?"

"யாரும், எதுவும் சொல்லல. ஆனா, எனக்கே தெரியும்"

"நீ எந்த நூற்றாண்டுல இருக்குறடீ ?" , சுஜி கேட்க, கேள்வியோடு பார்த்தாள், யாழினி.

"உன்னைத்தான், கேக்குறேன். நீ எந்த நூற்றாண்டுல இருக்குற ? முதல்ல, நீ மணாளனோட மனம்விட்டுப் பேசணும். உன்னைப்பற்றி அவரும், அவரைப்பற்றி நீயும், கொஞ்சமாவது தெரிஞ்சிக்கணும். அப்போதானே, அத காதல்னே சொல்லமுடியும் ?

அங்கே பார்த்தேன். இங்க சிரிச்சேன். எங்கேயோ பேசினேன்னு சொல்றதுக்கு, இது என்ன சினிமாவா ? வாழ்க்கை யாழினி, வாழ்க்கை"

"அப்படி இல்ல, சுஜி. மனம்விட்டுப் பேசினாலும், ஒரு பிரயோஜனமும் இல்ல. அந்த குடும்பத்தோட, நாங்க சம்பந்தம் வச்சிக்கவே முடியாது. அவங்கள, நீ பாக்கல சுஜி. பார்த்திருந்தேன்னா, நீ கூட, நான் சொன்னதையேதான் சொல்லுவ"

"யாழினி. திஸ் இஸ், டூ மச். எதுக்குமே, ஒரு டெம்ப்ளேட் வச்சி யோசிக்கக்கூடாது. பணக்காரங்க எல்லாருமே, ஒரு மாதிரிதான்னு, யார் சொன்னது ? இன்னும் ரெண்டு வருஷம்போனா, நீ வாங்குற சம்பளத்துக்கு, நீயே ஒரு பெரிய ஆள்தான். அப்போ, நீயும் மத்தவங்கள ஏளனமாத்தான் நடத்துவியா ? " , சுஜியின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"முதல்ல, அவரை சந்திச்சு, உன் பக்கம் இருக்கும் எல்லா விஷயங்களையும், சொல்லு. அவருக்கு உன்மேல  இருக்குறது, காதலான்னு தெரிஞ்சிக்கோ. அது காதலா இருந்தா, அவர் குடும்பத்தைப் பத்தின பேச்சைப் பேசலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு, சும்மா இப்படி அழாதே. ட்ரை டு பி பிராக்ட்டிகல்"

"ம்ம்ம்.."

"என்ன ம்ம்ம் ?? முதல்ல, அவர் நம்பருக்கு கால் பண்ணு" , சுஜி சொல்லவும்தான், தன்னிடம் மணாளனைத் தொடர்புகொள்ளும் எந்த ஒரு வழியும் இல்லையென்பதை உணர்ந்தாள், யாழினி.

"என்ன ? நம்பர் இல்லையா ?"

"ம்ம்ம்.." , அப்பாவியாக விழித்தாள்.

"என்ன ஒரு காவியக் காதல் !! நம்பர் இல்ல. தொடர்புகொள்ள, எந்த வழியும் இல்ல. இது ஒரு காதல், இதுக்கு ஒண்ணரை மணிநேரமா, பீலிங்கு !!

பேசாம, மனசுல  நினச்சிக்கோ. தானாவே, டெலிபதியில தகவல் போகும். நல்ல புள்ளைங்க " , என்று தலையிலடித்துக்கொண்டாள், சுஜி.

அழுததால், முகம் வீங்கியிருந்தது. முகத்தைக் கழுவி, துடைத்துக்கொண்டு, மறுபடியும் தங்கள் இருக்கைக்கு வந்து சேர்ந்தார்கள், இருவரும். 

அடுத்த ஐந்து நிமிடங்களில், எதிர்பாராதவிதமாக, ஒரு மெயில் நோட்டிபிகேஷன் வந்தது. ராதா மணாளனிடமிருந்து, யாழினிக்கு.

அவள் கரங்கள் சில்லிட்டன. இமைகள் படபடத்துக் கொண்டன. 

என்னடா இது !! சுஜி சொன்னதுபோல, டெலிபதியா ?? டெலிபதி எல்லாம் உண்மையா, என்ன ??

குழப்பங்களையெல்லாம் மீறி, ஒரு குறுகுறுப்பு வந்தது. யோசித்துக்கொண்டே, தன் மெயில்பாக்ஸைத் திறந்தாள். அவர்கள் ஏற்கனவே சந்தித்துக்கொண்ட, அந்த ரெஸ்டாரெண்டுக்கு வருமாறு, செய்தி சொல்லியிருந்தான், மணாளன்.

"அன்புடன், ராதாமணாளன்" , என்று முடிந்திருந்த மெயிலை, வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"என்னாச்சு ?? " , யாழினியின் முகப்போக்கைப் பார்த்து கேட்டாள், சுஜி.

விஷயம் அறிந்ததும், "நல்லதாப்போச்சு, இனி நீ என்ன தொந்தரவு பண்ணவேண்டாம். உனக்கே, பதில் கிடைச்சிரும்" , என்று சொல்லிவிட்டு புன்னகைத்தாள்.

'போகலாமா, வேண்டாமா' , என்று யோசித்துக்கொண்டிருந்த யாழினியை , நிச்சயம் போயே தீரவேண்டுமென்று கட்டாயப்படுத்தினாள்.

"இங்க பாருடீ. இன்னையோட இதுக்கு நீ ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும். ஒண்ணு, முறையா பேசி, கல்யாணம் பண்ணிக்கோங்க. 

இல்ல சரிவராதுன்னு தோணுச்சுன்னா, வாஷ் அவுட் எவெரிதிங், ப்ரம் யுவர் மைண்ட். சீக்கிரமே, அத பண்ணனும். அதுதான் உனக்கும் நல்லது, வானதி ஆன்டிக்கும் நல்லது. 

புரியுதா ? நீ அங்க போயிட்டு, எனக்கு மறந்துபோச்சு, அது இதுன்னு சொல்லக்கூடாது. போற, கேக்குற, திரும்பி ஒரு நல்ல முடிவோட வர்ற. டீல்" , என்று ஆவேசமாகப் பேசி, அனுப்பிவைத்தாள்.

.....

அந்த ரெஸ்டாரண்டுக்கு வரும்வரை, யாழினியின் மனதில், பல கேள்விகள் இருந்தன. ஆனால், அங்குவந்து அவனைப் பார்த்த பின்னர், எல்லாம் மறந்து, வெறும் புன்னகையும் வெட்கமும் மட்டுமே.

அவளைப் பார்த்ததும் புன்னகைத்துவிட்டு, 

"உட்காருங்க யாழினி. உங்ககிட்ட, இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" ,என்றான்.

"ம்ம்ம்.. ஓகே.. ஹ்ஹ.. " , பெருமூச்சு விட்டுவிட்டு , உட்கார்ந்தாள், யாழினி.

"சரி. என்ன எப்போ, உங்க வீட்டுல அறிமுகப்படுத்தி வைக்கப்போறீங்க ? " , என்றான் பட்டென்று.

"பார்டன்.." 

"அதுதான் யாழினி. என்ன எப்போ , உங்க வீட்டுல, அறிமுகப்படுத்தி வைக்கப்போறீங்கன்னு, கேட்டேன்"

"எதுக்கு ? "

"அது சரி. நல்ல கேள்வி இது. பரவால்ல, நானே பதில் சொல்லுறேன்.

எதுக்கு அறிமுகப்படுத்தனும்னா,, அடிக்கடி சிக்னல்ல நின்னு என்ன தேடுனதுக்கு. என் பேஸ்புக் பக்கத்தை எடுத்து பார்த்ததுக்கு. யாருன்னே தெரியாத என்னப் பத்தி, உங்க கிளோஸ் பிரெண்டுகிட்ட சொன்னதுக்கு. அன்னைக்கு ஹோட்டல்ல, பாத்துட்டும் பாக்காதமாதிரி நடிச்சதுக்கு. உரிமையோட, என் பேர சொன்னதுக்கு. எல்லாத்துக்கும் மேல..."

யாழினியின் இதயம், படபடவென்று அடித்துக்கொண்டது.

"எல்லாத்துக்கும் மேல..."

'என்ன சொல்லப்போகிறான்' , என்று ஆவலோடு கவனித்துக் கொண்டிருந்தாள்.   

"சார். ஆர்டர் " , என்று வந்து நின்றார், சர்வர்.

'அடடா.. இப்படி ஆகிவிட்டதே.. அவன் என்னவோ சொல்லவந்தானே !! இப்போது, அந்தப் பேச்சு பாதியிலேயே நின்றுவிட்டதே.. எப்படி அவனிடம் அதை மறுபடியும் கேட்பது ??' , என்று நினைத்து, குழம்பிக்கொண்டாள்.

"ப்ச்ச்.. " , அவள் மனதின் போக்கை ,முகமும் உதடும், காட்டிக்கொடுத்தன.

"ஹ்ம்ம்.. சரி, சொல்லுங்க யாழினி, உங்க வீட்டுல யார் யாரெல்லாம் இருக்காங்க ?"

அவள் சொல்ல நினைத்ததை, அவனே கேட்டுவிட, தன்னைப்பற்றி எல்லாவற்றையும் சொன்னாள். சொல்லிமுடிக்கும்போது, அவளை ஒரு சோகம் கவ்விக்கொண்டது.

கம்மியா குரலில், "நோ ஸிம்பதி ப்ளீஸ். எனக்கு அது பிடிக்காது" என்றாள்.

"இல்லை. கண்டிப்பா, ஸிம்பதியெல்லாம் இல்லை. எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. உன் அம்மாவை நினைத்தால், பெருமையாகக்கூட இருக்கிறது. இப்படி ஒரு தைரியம், எல்லா பெண்களுக்கும் வேண்டும், யாழினி. உன்னை நினைத்தால்கூட, பெருமையாகத்தான் இருக்கிறது.

இதில், எங்கிருந்து ஸிம்பதி வரும் ? அப்படியே, எனக்கு வருத்தமாக இருந்தாலும், அது உன் அம்மாவை நினைத்துமட்டும்தான். அதுவும், 'உன் அம்மா, இரண்டாவது திருமணம் செய்திருக்கலாமோ' என்று தோன்றுவதால். 

துணையில்லாமல், பல ஆண்டுகள் வாழ்வதென்பது, நரகம், யாழினி. அதனால்தான், எனக்கு அப்படி தோன்றுகிறது. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மன்னிக்கவும்" , சற்றுநேரம் , மௌனம் சாதித்தான்.

பின்னர், "உனக்கென்ன, ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அது, உன் கடந்தகாலத்தை முழுவதுமாக மறக்கடித்துவிடும். அதற்கு, நான் காரண்ட்டி" என்று சொல்லிவிட்டு, சிரித்துக் கண்ணடித்தான். 

இதுவரை, அவனைப் பிடித்ததைக்காட்டிலும், இப்பொழுது, அதிகமாகப் பிடித்தது.

'மரியாதை', பெண்கள் ஆண்களிடம், அதிகமாக எதிர்ப்பார்ப்பது, மரியாதையைத் தான்.

காதலிக்கத் தெரிந்த ஆணைவிட, மதிக்கத்தெரிந்த ஆணால்தான், ஒரு பெண்ணை, காலம் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கமுடியும்.

மணாளன், இந்த சந்திப்பின்போது, யாழினிக்கு கொடுத்துச் சென்றது, 'இவரோடு நம் வாழ்க்கை அமைந்தால், அது மகிழ்ச்சியோடு இருக்கும்' என்ற நம்பிக்கையை.

இருவரும், தங்கள், அலைபேசி எங்களோடு சேர்த்து, இதயங்களையும் பரிமாற்றிக்கொள்ள, அந்த சந்திப்பு முடிந்தது.

ஆனால், உங்களில் எத்தனைபேர் கவனித்தீர்கள் ? யாழினி, தான் கேட்க வந்ததை மணாளனிடம் கேட்கவேயில்லை என்பதை. காதலில் மாட்டிக்கொள்ளும் நபர்கள் இப்படித்தான். எத்தனை ஜாக்கிரதையாக இருந்தாலும், ஒரு சிலவற்றை தவறவிட்டுவிடுவார்கள்.

அந்த கேள்வியைக் கேட்காததால், அவள் சந்திக்கப்போகும் பிரச்சனைகள் என்னென்ன !!

யாழினி வருவாள்...


This is my first Romantic Novel in Tamil

If you are a fan of  Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi. 

You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post