யாழினி | A Tamil Romantic Novel by Sabari Paramasivan | PART 9


அந்த இருவரையும், கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள், யாழினி. அந்த ஆணின் கையைப்பிடித்து, இழுத்தபடியே நடந்துவந்தது,  அந்தப் பெண் 'ராதா'.

ராதா, நேரில் பார்க்க , சற்று அதிகமாகவே, அழகியாக இருந்தாள். அவள் அணிந்திருந்த நேர்த்தியான ஜீனும், குர்த்தியும், விரித்துப் போடப்பட்டிருந்த அடர்த்தியான தலைமுடியும், முன் நெற்றியில் சுருண்ட கேசமும், அவள் முகபாவனைகளும், என்று, எல்லாமே அழகாக இருந்தன.

கொஞ்சியபடியே, அவள் இழுத்துவந்தது, மணாளனைத்தான். அவர்கள் இருவரையும், அந்த இடத்தில் பார்த்த கணமே , யாழினிக்கு தலைசுற்றியது.

அந்த ஒரு நிமிடத்தில், அவள் கனவுகள் அத்தனையும், சுக்குநூறாக வெடித்துச் சிதறியதுபோல இருந்தது. இதயம், அது இருக்கும் இடத்திலிருந்து எடுக்கப்பட்டு, நெஞ்சுக்கூடு , வெற்றிடமானதாக, ஒரு உணர்வு.

அந்த உணர்வு,  'மணாளனுடன் ராதாவைப் பார்த்ததனால் ஏற்பட்டது'  என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.

மனதளவில், யாழினி, உறுதியான பெண். இதுமாதிரி, சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் உடைந்துபோவதற்கு, அவள் கனவுலகத்தில் சஞ்சரிப்பவளும் அல்ல. எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் மனோபக்குவம், அவளுக்கு இருக்கிறது. விசாரித்து செயல்படும் பொறுமையும்கூட.

அப்படியானால், அவள் கலக்கத்தின் காரணம் என்ன ?

அதற்கு, நீங்கள் யாழினியை இன்னும் கொஞ்சம், புரிந்துகொள்ள வேண்டும்.

யாழினிக்குள், ஒரு வலி நிறைந்த கடந்தகாலம் இருக்கிறது. பணத்தின் பின்னால் சென்று, அவள் அம்மாவிற்கு, அவள் தந்தை இளைத்த துரோகம். அந்த துரோகத்துக்குப் பின், அவர்கள் சந்தித்த வறுமை. ஒவ்வொரு நாளும், அவர்கள் பட்ட கஷ்டங்கள்.

'எங்கே, பணத்திற்காகத் தன்னிடம் வந்துவிடுவார்களோ' என்ற பயத்தில், அவர்களை மொத்தமாக ஒதுக்கிய உறவுகளின், உதாசீனம். தன்வீட்டு விசேஷங்களுக்குக்கூடக் கூப்பிடாது, ஒதுக்கிய நண்பர்களின், ஏளனம். இப்படி ஆயிரம் சம்பவங்களும், அவை தந்த வலிகளும், இருக்கின்றன.

அந்த கடந்தகாலம், அவளுக்கு பணக்காரர்களின்மீது, ஒரு தீராத சந்தேகத்தைத் தந்திருந்தது. 'அவர்களுக்கும் நமக்கும் சரிப்பட்டுவராது' , என்ற எண்ணத்தைத் தந்திருந்தது.

ஒருவேளை, இந்த உறவு, காதலாகி, அந்த காதல், கல்யாணம்வரை வந்தால், இந்த பெரிய குடும்பத்தின் முன்னால் அல்லவா, வானதியை நிறுத்தவேண்டியிருக்கும். இவர்கள் படாடோபத்துக்கும், வானதியின் எளிமைக்கும், ஏணி வைத்தால் கூட எட்டாதே. 

ஒற்றை ஆளாய், தன்னைப் பாடுபட்டு வளர்ந்த அன்னைக்கு, தான் செய்யும் கைமாறா இது ? இதுவரை, அவள் பெருமைப்பட்டுக் கொள்ளும்படி மட்டுமே நடந்த தான், இந்த காரியத்தில், மொத்தமாக அவளை...

'அந்த பணக்காரக் குடும்பம்தான், மணாளனின் குடும்பம்' , என்று தெரிந்த அடுத்த நொடி, இவையெல்லாம்தான்அவளுக்குத் தோன்றியது.

தனக்கு 'கிடைக்கும்' , என்று அவள் நிச்சயமாக நம்பிய ஒன்று, இப்போது, அவள் கையயைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டதாக உணர்ந்தாள். எதையெல்லாமோ, மண்டையில் போட்டுக் குழப்பிக்கொண்டு, அவளையறியாமலேயே விம்மினாள்.

உதட்டை மடித்துக்கொண்டு, அவள் அழுகையை அடக்க முயன்றபோது, அவள் கண்கள் கலங்கிச் சிவந்தன.

அதைப் பார்த்து, எதிரிலிருந்த கோகிலா, "கபாப், ரொம்ப காரமா, யாழினி ?" என்றாள்.

வேறு வழியில்லை. அதனால், சமாளித்துக்கொண்டு, "ம்ம்ம். ஆமா, கோகிலா. நான் இவ்வளவு காரம் சாப்பிட மாட்டேன் " என்று சொல்லிவிட்டு டிஸ்யூ பேப்பரால், கண்களை ஒற்றிக்கொண்டாள், யாழினி.

'மணாளனின் கண்ணில் பட்டுவிடக் கூடாது' , என்பதற்காக, உணவு எடுக்கச்செல்வதுபோல பாசாங்கு செய்துவிட்டு, அவன் பார்த்துவிடாத வண்ணம், பின்னால் திரும்பி, உட்கார்ந்து கொண்டாள்.

அப்படி உட்கார்ந்தபோதிலும், பின்னால் திரும்பி, அந்த குடும்பம் உட்கார்ந்திருந்த டேபிளைப் பார்க்கவேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது.

ஆனால், அப்படிப் பார்ப்பது நாகரீகமாக இருக்காது. அதனால், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, முன்னால் இருக்கும் அந்த ஃப்ளவர் வேஸ்சைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வைதான், அதன்மீது இருந்ததே ஒழிய, அவள் நினைப்பு முழுவதும் அந்த குடும்பத்தின்மீதும் மணாளனின்மீதும் தான்.

இத்தனை நாட்களில், அவள் என்னவெல்லாமோ கற்பனை செய்திருந்தாள். அதுவும், அந்த ரெஸ்டாரண்டில் மணாளனுடனான சந்திப்புக்குப் பிறகு, அந்த கற்பனை கொஞ்சம் அதிகமாகியிருந்தது. சொல்லப்போனால், 'அவனுடன்தான், அவள் வாழ்க்கை அமையப் போகிறது' என்றே நினைத்திருந்தாள்.

" மிஸ். யாழினி"

பின்னாலிருந்து ஒரு குரல் கேட்க, திரும்பிப்பார்த்தாள்.

"அட.. நான் கூட, சந்தேகத்தில்தான் கூப்பிட்டேன். உண்மையிலேயே, நீங்க தானா ?" , கேட்டபடி நின்றிருந்தான் மணாளன்.

வழக்கமாக, அவனை அப்படி பார்க்கும்போது, சந்தோஷம் தொற்றிக்கொள்ளும். ஆனால், இன்று அப்படி இல்லை.

"நீங்க.. நீங்க இங்க எப்படி ? " , அவன் அங்கிருப்பதை , அறியாதவள்போலக் கேட்டாள்.

"இங்க, வேற எதுக்கு வருவாங்க ? சாப்பிடுறதுக்குத்தான்.. " , என்று சொல்லிவிட்டு புன்னகைத்தான்.

"ம்ம்ம்.... யா.... சாரி.... திடீர்னு பார்த்ததால, இப்படி கேட்டுட்டேன். சாரி.... சாரி...." , என்று மறுபடியும், நடித்தாள்.

"டீம் லஞ்ச்சா ? "

"ஆமா.."

இவர்கள் இருவருக்கும் என்ன தொடர்பு என்பது புரியாமல், பேந்த பேந்த விழித்தாள், கோகிலா.

"நீங்க எப்படி, என்ன கண்டுபிடிச்சீங்க ?" , இதைக்கேட்கும்போது, 'வேண்டுமென்றே, நாம் பின்புறம்காட்டி உட்கார்ந்திருந்தபோதிலும், கண்டுபிடித்துவிட்டானே' , என்ற ஆதங்கம் தெரிந்தது. 

அதை உணராதவனாய், "ஹா ஹா ஹா.. நீங்க, அடிக்கடி ஒண்ணு மறந்துடுறீங்க, யாழினி. நான், என்ன வேலை பார்க்கிறேன்னு !! " சொல்லிவிட்டு சிரித்தான்.

வழக்கமான நாட்களாக இருந்திருந்தால், "இந்தமாதிரி விஷயங்களுக்குத் தான், உங்கள் மூளையை பயன்படுத்துவீர்களா ?" , என்று கேட்டிருப்பாள்.

இன்று, அப்படியெல்லாம் கேட்கும் மனநிலையில், அவள் இல்லை.

"ஓ.. ஆமால்ல.."

"சரி. இப்ப உங்களுக்கு நான் ஒரு , 'சர்ப்ரைஸ்' கொடுக்கப் போறேன். அப்படியே, அந்தப் பக்கம் பாருங்க"

அவன் கைகாட்டிய திசையில், பார்த்தாள். அவன் குடும்பம் அமர்ந்திருந்த டேபிள், தெரிந்தது.

"அது என்னோட பேமிலிதான் . கிட்டத்தட்ட பாதி குடும்பமும், இங்கதான் இருக்காங்க. மாதம் ஒருமுறை, இப்படி ஹோட்டல்ல சந்திப்போம். ஹோட்டல் போரடிச்சா, வீட்டுலயே, பார்ட்டி மாதிரி பண்ணிக்குவோம். ஆனா, கண்டிப்பா மாதம் ஒருமுறை சந்திக்கணும். தாத்தாவோட ரூல். ம்ம்ம்..."

ஏற்கனவே தெரிந்தாலும், தெரியாதது போல் நடித்து கொண்டு, "ஓ.. இன்டெரெஸ்ட்டிங்.." என்று பெயருக்குச் சிரித்தாள்.

"சரி. ஒண்ணு பண்ணலாம். நீங்க என்கூட வாங்க. நான் உங்கள அவங்ககிட்ட அறிமுகப்படுத்தி வைக்கிறேன்" , என்று சொல்லி, அவன் அழைக்க,

"இல்லை வேண்டாம். என்னை எதுக்கு.." , என்று தயங்கினாள், அவள்.

"எப்படியும், ஒருநாள் அறிமுகம் பண்ணித்தானே ஆகணும். அதை இன்னைக்கே பண்ணிட்டாப் போச்சு" , என்று சொல்லிவிட்டு, ஒரு கண்ணை மட்டும் சிமிட்டி சிரித்தான். அந்த பாவனையும், சிரிப்பும், மறுபடியும் மின்னலைப் பாய்ச்சின.

"இல்லை.. டீம் லுஞ்சுக்காக, அலுவலக நண்பர்களோட வந்துருக்கேன்.. அவங்கள விட்டுட்டு, நல்லாருக்காது.. "

"யாழினி , பரவால்ல. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். கூப்பிடுறாங்கல்ல. போயிட்டு வாங்க " , என்று சொன்னாள் கோகிலா.

இந்த இருவரின் பேச்சிலும், பாவனையிலுமிருந்து, அவள் நிச்சயம் எதையாவது, கற்பனை செய்திருக்கக்கூடும்.

பக்கத்துக்கு டேபிளில் இருந்த அலுவலக நண்பர்கள்கூட, அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை கவனிப்பது தெரிந்தது. அவன் குடும்பத்து பெண்களில் ஒருசிலர், அவ்வப்போது இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டார்கள்.

யாழினியை, கூச்சம் தின்றது. "இல்லை.. அது சரிவராது, மணாளன்" , என்றாள்.

அவன் முகத்தில், ஒரு மலர்ச்சி. இதழை வளைத்து சிரித்தான்.

"அடடா. பதட்டத்தில், பெயரைச் சொல்லிவிட்டோமே !! " , என்று நாக்கைக் கடித்துக்கொண்டாள். அவஸ்தையாய், நெளிந்தாள்.

எப்படியோ சமாளித்துவிட்டு, இறுதியில், அவனுடன் செல்லாமல், நண்பர்கள் கூடவே, அமர்ந்துகொண்டாள்.

அவன் ஏமாற்றத்துடன், திரும்பிச்சென்றது, வருத்தமாக இருந்தது.

அந்த ஹோட்டலிலிருந்து கிளம்பி, அலுவலகம் செல்லும் வழியில், சேவியர் சொன்னான்.

"நான்கூட , உன்னை முட்டாள்னு நெனச்சேன் லினி. ஆனா, நீ தெளிவாத்தான் இருக்க. என்னைவிட பெரிய இடமா, ஒருத்தரப் பிடிச்சதாலதான், என்னை வேண்டாம்னு சொல்லியிருக்க. எனக்குத்தான் அது புரியல. இடியட்.

மணி மேட்டர்ஸ் எவரிதிங். எனிவேஸ், நல்ல தேர்வு "

'பணம், பணம், பணம்...

பணம் தான் எல்லாம். இல்ல. இந்த பணத்தைத்தாண்டி யோசிக்க, இந்த மனிதர்களுக்கு, எதுவுமே இல்லையா ? இந்த உலகத்தில், பணம்தான், எல்லாமா ?"

குமுறியது, அவள் மனம்.

யாழினி வருவாள்.


This is my first Romantic Novel in Tamil

If you are a fan of  Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi. 

You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post