யாழினி | A Tamil Romantic Novel by Sabari Paramasivan | PART 13

 "இந்தா.. ஏ பொண்ணு.. உன்கிட்டத் தான் பேசிட்டு இருக்கேன்.."  

"ஏதாவது பதில் சொல்லுறாளாப் பாரேன். அழுத்தக்காரி தான் போல" அந்த வயதானவர், தனது அருகே நின்ற நபரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

யாழினி சுதாரித்துக்கொண்டு, "இல்ல.. யாரும் எனக்கு எதுவும் சொல்லித்தரல. என்ன நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்" என்றாள்.

அவர் இளக்காரமாகப் புன்னகைத்துக்கொண்டு, "சரி.. அப்படீன்னா நான் கேட்கிற ஒரு கேள்விக்கு பதில் சொல்லு.. உனக்கு மணாளனை எப்படித் தெரியும் ?"

அவள்  மௌனம் சாதித்தாள்.

"நான் கேக்குற கேள்வி புரியுதா, இல்லையா ? என் பேரனோட உனக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டதுன்னு கேட்டேன் ? ஸ்கூல், காலேஜ்ல அவன்கூடப் படிச்சியா ? இல்லேன்னா, அவன்கூட ஐபிஎஸ் ட்ரைனிங் எதுவும் போனியா ?"

"ம்ம்ஹூம்" தரையைப் பார்த்தபடி, இல்லையென்று தலையாட்டினாள்.

"இதெல்லாம் இல்லேன்னா, அப்போ வேற எப்படி உனக்கு அவனோட பழக்கம் ஏற்பட்டது ?" , கேட்டுவிட்டு தோரணையாகப் பார்த்தார்.

இந்தக் கேள்விக்கு அவள் எப்படி பதில் சொல்வாள் ? மணாளனை சிக்னலில் பார்த்தேன். கையைப் பிடித்து, ரோட்டைக் கடந்து விட்டான். பின்னர், எதேட்சையாகப் பல இடங்களில் சந்திக்க நேர்ந்தது. இப்படியெல்லாமா, சொல்ல முடியும் ? இப்படிச் சொன்னால், அவர்தான் நம்பப்போகிறாரா ? 

ஏற்கனவே, அவளை குற்றவாளியாக முடிவு செய்துவிட்ட ஒருவரிடம், எந்தமாதிரியான பதிலைச் சொல்லித்தான் திருப்திப்படுத்த முடியும் ? அதனால், எதுவுமே பதில் சொல்லாமல் நின்றாள், யாழினி. 

"நான் சொல்லல. எல்லாம் திட்டம். திட்டமிட்ட நாடகம். உண்மையிலேயே, இவமேல தப்பில்லைன்னா, இப்படி பதில் சொல்லாம எதுக்காக நிக்கணும் ? இந்தமாதிரி பொண்ணோட மனோவுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டுதுன்னுதான் ஆச்சரியமா இருக்கு" , மணாளனின் தாத்தா சற்று கோபப்பட, அவருக்கு இவரும் வந்தது.

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நபர், ஒரு கிளாசில் தண்ணீர் ஊற்றி, அந்த வயதானவரிடம் கொடுத்தார். அவர் அதை வாங்க மறுத்துவிட்டு, "முதல்ல, இவள வெளியப் போகச்சொல்லு. இந்த மாதிரி பொண்ணுங்களப் பார்த்தாலே, அருவெறுப்பா இருக்கு. பணத்துக்காகப் பேய் மாதிரி அலையுற ஜென்மங்கள். போகச்சொல்லு, போகச்சொல்லு. விஷப்பார்வை " புறங்கையை விசிறி, அவர் சொன்ன தோரணையில், யாழினியின் உடம்பெல்லாம் கூசியது.

பொங்கிவந்த கண்ணீரை, கர்சீப்பைக் கொண்டு அமர்த்தியபடி, அந்த அறையிலிருந்து வேகமாக வெளியேறினாள். அப்பொழுது, அறையின் வாசலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ராதா, தன்னைப்பார்த்து கிண்டலாகச் சிரிப்பதுபோல இருந்தது.

வேகமாக நடந்து, அந்த வீட்டின் போர்டிகோவிற்கு வந்து சேர்ந்தாள். மெயின் கேட்டை நோக்கி, வேகமாக நடந்தாள். அப்படி நடக்கும்போது, எதிர்த்தாற்போல் வந்தவர்கள் எல்லோரும், தன்னையே வெறித்துப் பார்ப்பதுபோல இருந்தது. தலைகுனிந்து கீழே பார்த்தபடி, நடந்துகொண்டிருந்தாள்.

உண்மையில், அவள் நினைத்ததுபோல யாரும் அவளை வெறித்தெல்லாம் பார்க்கவில்லை. அந்த வயதானவரின் அறையிலிருந்த நான்குபேர் தவிர, வேறு யாருக்குமே, அங்கு நடந்த எதுவுமே தெரியாது. இருந்தாலும், யாழினியின் மனம் ஏதோ, இந்த உலகத்தின் ஒட்டுமொத்த மனித இனத்தின் முன்பும், அவள் அவமானப்படுத்தப் பட்டதைப்போல கற்பனை செய்துகொண்டது.

அதுவரை, அந்த வீட்டில் நடந்த சந்தோஷமான நிகழ்வுகளெல்லாம் நொடியில் மாயமாக மறைந்து, அவள் இந்த உலகத்தில் தனித்து விடப்பட்டதைப்போல இருந்தது.

அந்த வீட்டின் பெரிய கேட்டைத் தாண்டும்போது, மணாளன் வந்து அவளை அழைத்துபோனது ஞாபகம் வந்தது. பெருமூச்சுவிட்டுக்கொண்டு, 'இன்னொரு முறை இந்த வீட்டுப்பக்கமே வரக்கூடாது' என்று தனக்குள்  நினைத்துக்கொண்டாள்.

வீட்டிலிருந்து வெளியேறும் நேரத்தில், அவள் முன்னால் கடந்து சென்ற ரிட்டர்ன் ஆட்டோ ஒன்று, அவளைப் பார்த்துவிட்டு, வேகம்குறைத்து அவளருகே வந்து நின்றது. வழக்கமாகத் தான் செலவழிக்கும் ஒவ்வொரு காசுக்கும் கணக்குப் பார்க்கும் யாழினி, ஆட்டோ சார்ஜ் பற்றி ஒருவார்த்தையும் பேசாமல், உள்ளே ஏறி உட்கார்ந்தாள்.

ஆட்டோ டிரைவர் அண்ணன் என்னவெல்லாமோ பேசிக்கொண்டே வந்தார். யாழினி, அவற்றையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை. கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அதை அடக்கிக்கொள்ள முடியாமல், அவள் தவித்த தவிப்பிற்கு அளவே கிடையாது. 

"என்னம்மா. பொல்யூஷனால கண்ணு கலங்குதோ. கண்களை மூடிக்கோம்மா. எனக்கெல்லாம் பழகிடுச்சி. நீ ஒருவேளை ஏசி ரூம்லயே வளர்ந்திருப்ப போலிருக்கு. இல்ல சென்னைக்கு நீ புதுசா என்ன ?" , அவர் பேசிக்கொண்டே இருக்க.

"இல்லண்ணா. எனக்கொண்ணும் பிரச்னையில்லை. நான் பாத்துக்குறேன். தேங்க்ஸ்" , என்றாள்.

ஆட்டோ, போரூரைத் தாண்டிய நிலையில், அலைபேசியில் அவளை அழைத்தான், மணாளன். மனம் என்னதான் அந்த அழைப்பை எடுக்கவேண்டுமென்று சொன்னாலும், புத்தி அதற்கு இடம்தரவில்லை. 

கண்ணீரோடு அந்த அலைபேசியைப் பார்த்து, அதை ஸ்விட்ச் ஆப் செய்தாள், யாழினி. இனிமேல், இவனுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அந்தக் கணத்தில் நினைத்துக்கொண்டாள், அவள். அப்படி நினைத்த அந்த நொடி, அவளது நெஞ்சம் கனத்து, கண்களிலிருந்து கண்ணீர் பொங்கிவந்தது. தன்னையும் மறந்து உடைந்துபோனாள்.

அவள் அழுவதைத் தன் கண்ணாடியில் பார்த்துவிட்ட ஆட்டோ டிரைவர், "என்னாச்சும்மா ? ஏதாச்சும் பிரச்சனையாம்மா ?" என்றார்.

"இல்லண்ணா. ஒண்ணும் இல்லண்ணா. நீங்க சீக்கிரமா என்ன ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணிருங்க" என்று அவள் சொல்ல, 

"பொது இடம்னுகூடப் பாக்காம அழுறன்னா, நிச்சயமா ஏதாச்சும் பெரிய பிரச்சனையாத்தான் இருக்கும். எப்பவுமே, நம்ம மனச திடமா வச்சிக்கணும்மா. எதுவா இருந்தாலும், சரியாகிடும். கலைப்படாதே" என்று ஆறுதல் சொன்னார், அவர்.

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு, "தேங்க்ஸ் அண்ணா" என்றாள், யாழினி.

அடுத்த பத்து நிமிடங்களில், ஹாஸ்டெல் அறைக்கு வந்துசேர்ந்ததும், முதல் வேலையாகத் தனது கைப்பையை ஒரு ஓரத்தில் வீசிவிட்டு, படுக்கையில் சரிந்தாள். கண்ணைமூடியபோது, அன்று நடந்த நிகழ்வுகளெல்லாம் கண்களுக்குள் படமாக விரிந்தன.

இந்த மூளைக்குத்தான் என்ன ஒரு கொடூர புத்தி !! நல்ல நிகழ்வுகள் எல்லாவற்றையும் நொடிப்பொழுதில் மறந்து தொலைத்துவிடும். ரணப்படுத்தும் நிகழ்வுகளையோ, மிகத் துல்லியமாக ஞாபகம் வைத்துக்கொண்டு, திரும்பத் திரும்ப ரீவைண்ட் செய்து காட்டும். என்ன ஒரு வக்கிரம்.

கட்டிலில் சுருண்டு படுத்துக்கொண்டு, அந்தப் பெரியவரின் அறைக்குள் நிகழ்ந்தவற்றையும், அவர் கேட்ட கேள்விகளையும் சிந்தித்துக் கொண்டிருந்தாள். ஏன் நம்மைப்பார்த்து அப்படிச் சொன்னார் ? பணத்துக்காகவா நாம் அவனிடம் பழகினோம் ? பின்னர் ஏன் நம்மைப் அவர் , பொய்யானப் பெண்ணென்று சொன்னார் ? இப்படிப் பலகேள்விகளுக்கு விடைதேடினாள்.

விடையும் கிடைக்கவில்லை. அவளால் மறக்கவும் முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் மறக்க முடியாமல், வெடித்து அழுதாள்.அவளது ரூம்மேட்டுகள் யாரும் அறையில் இல்லாததால், கொஞ்சம் அதிகமாகவே கேம்பிக்கேம்பி அழுதாள். 

அவ்வப்போது, தனது பால்கனியின் வழியாக, அந்த ஹாஸ்டெலின் முகப்புவாயிலைப் பார்த்துக்கொண்டாள். அங்கு நடந்தவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு, மணாளன் தன்னைத்தேடி வரவேண்டும் என்று உள்ளூர எதிர்பார்த்தது அவளது மனம்.

உண்மையில், அது ஒரு சாதாரண எதிர்ப்பார்ப்புதான். ஆனால், அவன் அப்படி வந்துநிற்கவில்லை. மறுபடியும் ஒருமுறை, தனது கைப்பேசியை ஆன் செய்து, அவனிடமிருந்து அழைப்பு ஏதும் வந்திருக்கிறதா என்று பார்த்தாள். அவள் ஸ்விட்ச் ஆப் செய்தபின்னர், "ப்ளீஸ் கால் மீ பேக்" என்று ஒரு குறுஞ்செய்தி மட்டுமே அவனிடமிருந்து வந்திருந்தது.

அது அவளுக்கு இன்னும் ஏமாற்றத்தையும், அவன்மீது காரணமில்லாத ஒரு கோபத்தையும் வரவழைத்தது. "தன்னை நம்பிவந்த ஒரு பெண், திடீரென்று கிளம்பிப் போயிருக்கிறாள். கைபேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது. அவளுக்கு என்னவாயிருக்கும் !! ஏதும் ஆபத்திலிருப்பாளோ !! என்றகூட யோசித்து அக்கறைகொள்ளாத ஒருவனயா இத்தனைநாள் காதலித்தோம்" , என்று தோன்றியது அவளுக்கு. 

அந்த ஒரே நாளில், வாழ்க்கை மொத்தமாகக் கரைந்துபோனதுபோல இருந்தது. 

"இந்த நாளை நிச்சயமாக மறக்கவே கூடாது. அவன் நல்லவனாகவேகூட இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், எனக்கு சரிவராது. இனி, நிச்சயமாக இந்த மணாளனுக்கு என் வாழ்வில் இடமில்லை. இடமேயில்லை" ,என்று தனது மனதில் நினைத்துக்கொண்டாள்.

சோர்வு, அசதி, வருத்தம், எல்லாமாகச் சேர்ந்து, அவளுக்குத் தூக்கத்தைத் தந்தன.

'காதலென்பது இயற்கையின் விளையாட்டு' என்பதைப் புரிந்துகொள்ளாத யாழினி, மணாளனிடமிருந்து விலக முடிவு செய்தாள். ஆனால், இயற்கை அவளுக்கென வேறொரு திட்டம் வைத்திருந்தது.

யாழினி வருவாள்.....


This is my first Romantic Novel in Tamil

If you are a fan of  Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi. 

You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.


Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post