யாழினி | A Tamil Romantic Novel by Sabari Paramasivan | PART 2


இதை பிரதிலிபி என்னும் APP-ல் படிக்க , இந்த LINK-ஐ பயன்படுத்தவும் 

"மணாளனா !! என்ன மாதிரி பெயர் இது. இந்த பெயரைப் பார்த்தால் எப்படியும் இந்த நபருக்கு நாற்பது வயதிருக்கும்" என்று மனதில் நினைத்துக்கொண்டு, தன் தலையை ஒரு சொல்லுக்கு உயர்த்திப்பார்க்க, "அடடே, நம் யூகம் இப்படி தலைகீழானதே" என்று அவள் தனக்கே ஒரு குட்டு வைத்துக்கொள்ளும்படி ஆனது.

அந்த இளைஞனுக்கு, முப்பது வயதுக்கு மேல் ஒரு வயதுகூட இருக்க வாய்ப்பில்லை. மழித்து, சுத்தமாக முகச்சவரம் செய்யப்பட்டு, மீசைமட்டும் சீராக வளர்க்கப்பட்டிருந்தது. மிகவும் வசீகரமான முகவெட்டு.

'அவன் இன்னும் தன் கைகளை பிடித்துக்கொண்டுதான் இருக்கிறான்' என்பதுகூட மறந்து, அவள் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அதுவரை அந்த சாலையை பார்த்துக்கொண்டிருந்த அவன், அவள் பக்கமாக திரும்பினான்.

அவன் தீர்க்கமான பார்வை, அவளுள் ஒரு மின்னல்போல பாய்ந்து, அடிவயிற்றில் எதோ ஒரு உணர்வை ஏற்படுத்தி, பின்னர் சுயநினைவுக்கு வரச்செய்தது.

டக்கென்று சுதாரித்துக்கொண்டு, "என்ன மிஸ்டர், உங்கள் மனதில் என்ன பெரிய சினிமா ஹீரோ என்று நினைப்பா ? ", கோபமாக அவள் கேட்கும்போது, அவள் மூக்கும் கன்னங்களும் சிவக்கவே, அவள் இன்னும் கொஞ்சம் அழகாகத் தெரிந்தாள்.

"ஹலோ !! எக்ஸ்கியூஸ் மீ", அவன் குரல் கம்பீரமாகவும் அதே நேரத்தில், ஒரு மென்மையோடும் இருந்தது.

"ஹலோ !! உங்களைத்தான். நான் உங்களுக்கு உதவிதானே செய்தேன். நியாயப்படி பார்த்தால், நீங்கள் எனக்கு நன்றிதானே சொல்லவேண்டும். மாறாக, என்மீதே கோபப்படுவது, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது !!"

"உங்களுக்கு என்ன பொண்ணுங்கன்னா ரோடு கிராஸ் பண்ணகூடாதெரியாதுன்னு நினைப்பா ? நாங்கெல்லாம் போர்விமானங்களை இயக்கக்கூடிய அளவுக்குவந்து வருடங்கள் ஆகுது", என்று சொல்லிவிட்டு, அதன்பின்தான், அவள் கையை அவன் இன்னும் பிடித்திருப்பதை உணர்ந்தவளாய் கைகளை திருகினாள்.

அவனும் அதை உணர்ந்து, சட்டென்று அவள் கைகளை விட்டான்.

அவளுக்கு, என்னவோ போலிருந்தது. இதுவரை அவள் கைகள் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்ததைப்போலவும், இப்போது விடுபட்டிருப்பதில், அவளுக்கே விருப்பமில்லாதது போலவும் தோன்றியது. அந்த கைகள், தன்னை பிடித்திருந்தபோது கிடைத்த வெப்பம், அவளுக்கு புதிது. அந்த கைகளின் ஸ்பரிசமும் , இறுக்கமும் கூட புதிதுதான் . 

இதுவரை, அவளை அப்படி யாரும் உரிமையோடு பிடித்துக்கொண்டது கிடையாது. சுஜியைத் தவிர. ஆனாலும், சுஜியின் பிடியில் இந்த அளவுக்கு வெப்பம் இருக்காது. அவள் கைகள் மிகவும் மிருதுவாக இருக்கும். மேலும், அந்த பிடியும் அவ்வளவு  இருக்கமில்லாது லேசாக இருக்கும்.

இது அப்படியில்லை, வேறுமாதிரி இருந்தது . ஆனால் , ஒரு பாதுகாப்புணர்வைத் தருவதுபோல் இருந்தது. 

'ஒருவேளை, அவன் தன் கையைப் பிடித்துக் கொண்டிருந்ததைத் தன் மனம் உள்ளூர விரும்பியிருக்கிறதோ' என்று நினைத்துப்பார்த்தாள். அது ஒருமாதிரி வெட்கமாகவும், தன்னை நினைத்தே தனக்கு கூச்சமாகவும், இருந்தது. 

"எக்ஸ்கியூஸ் மீ" மறுபடியும் அவன் அழைக்க, தலையை சிலிப்பிக்கொண்டு

"என்ன பெரிய உதவி ? நீங்கள் வரவில்லையென்றால், நானே கிராஸ் பண்ணியிருப்பேன். இதை சாக்காக வைத்துக்கொண்டு என் அனுமதி இல்லாமல், என் கையைப்பிடித்தது உங்களுக்கு அநாகரிகமாக தெரியவில்லையா ?", என்று கேட்டாள். 

"ஓஹோ.. அப்படின்னா சரி. வாங்க மேடம் . உங்கள மறுபடியும், அதே இடத்துக்கு கொண்டுபோய் விட்டுர்றேன். நீங்களே கிராஸ் பண்ணிக்கோங்க. இல்லேன்னா, டிராஃபிக் போலீஸ் வரும்வரை அந்த இடத்திலேயே நில்லுங்க", என்று சொல்லிவிட்டு மறுபடியும், அவள் கையைப் பிடிப்பதுபோல் பாசாங்கு செய்ய, அவள் கொஞ்சம் மிரண்டுத்தான் போனாள்.

"சார். அந்த சஸ்பெக்ட் ஸ்பாட்டுக்கு வந்துட்டான்னு நியூஸ் வந்துடுச்சி", என்று அங்குவந்த போலீஸ்காரர் சொல்லவும், "இதோ, வர்றேன்", என்று சொல்லிவிட்டு மறுபடியும் ஒருமுறை , அவளைநோக்கி அந்த மின்னல் பார்வையை வீசிவிட்டு விலகிச்சென்றான்.

அந்த பார்வை, மறுபடியும் அவளை எதோ செய்து, "அவன் இன்னும் கொஞ்சநேரம் அங்கேயே இருந்த்திருந்தால் நன்றாக இருக்கும்", என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

அவன் சென்ற திசையையே சில நிமிடங்கள் பார்த்துவிட்டு, ஒரு லேசான புன்னகையோடே, 'ஷேர் ஆட்டோ' ஏறி DLF வளாகத்தில் இருந்த தனது அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள்.

அவசரமாக மீட்டிங் ரூமைசென்றடைந்து, அந்த முக்கியமான ஆலோசனையில் கலந்துகொண்டு, பின் வேலைகளோடு மூழ்கிவிட உணவு இடைவேளையின்போதுதான், அவளுக்கு மீண்டும் மணாளனின் நியாபகம் வந்தது.

"யாழி.... கஃபேடெரியா போலாமா ? எனக்கு பயங்கரமா பசிக்குது", என்றபடி அவள் கியூபிக்கிளுக்கு வந்தாள் சுஜி.

"ஓ.. எஸ்.. எனக்கும்கூட", என்று சொல்லிவிட்டு ஆவலுடன் எழுந்தாள் யாழினி.

யாழினிக்கு எந்த ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும்கூட, சுஜியிடம் பகிர்ந்தே தீரவேண்டும். அப்படியிருக்கும்போது, இந்த மஹாவித்யாசமான சம்பவத்தைத் தன் உயிர்தோழியிடம் சொல்லவில்லையென்றால், தலையே வெடித்துவிடும். அதனால், வழக்கத்தைவிட கொஞ்சம் அதிக உற்சாகத்தோடேயே கிளம்பிச் சென்றாள்.

லிஃப்டுக்குள் நிற்கும்போதே சொல்லிவிடத்துடித்தாள். சுற்றி, வேறுசிலரும் இருந்ததால், அடக்கிக்கொண்டு, கடேசியாக டேபிள் பிடித்து அமர்ந்துகொண்டதும் சொல்லலாம் என்று முடிவு செய்தாள். ஜன்னலோரமாக இருந்த அந்த டேபிளில் இடம்பிடித்துக்கொண்டு, லஞ்ச் பாக்ஸை திறப்பதற்கு முன்னதாக, தன் கதையை திறக்க முற்படும்போது, அவள் அருகில் வந்து உட்கார்ந்தான் சேவியர்.

யாழினியின் இதயம் படபடக்கத் தொடங்கியது.


யாழினி வருவாள்....


அடுத்த பகுதி (PART - 3)

This is my first Romantic Novel in Tamil

If you are a fan of  Ramani Chandran Novels, you will definitely like this Romantic Novel. Tamil Romantic Novels online reading is so simple nowadays with Pratilipi. 

You can use that too. I will try to add more Tamil novels from my writing soon. I wish to make a good Tamil Novel Collections and improve my writing every day. Thanks for all this love and support.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post